No results found

    நீங்கள் இப்படித்தான்... விளக்கம் தரும் விசேஷ எண்கள்! #Nuemerology


    எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பார்கள் பெரியோர்கள். அதற்கேற்ப எண்ணுக்கும் எழுத்துக்கும் முக்கியத்துவம் அளித்தும் பலாபலன்களைச் சொல்லும் எண் ஜோதிடம் குறித்தும் பெயர் ஜோதிடம் குறித்தும் நாமறிவோம். இதேபோல், ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையிலான ஆதார எண்களைக் கொண்டு பலன் அறியும் முறைகுறித்தும் ஞானநூல்கள் விவரிக்கின்றன.

    ஆங்கில வருடக் கணக்கீடு, தெலுங்கு வருடக் கணக்கீடு, திருவள்ளுவர் ஆண்டு மற்றும் தமிழ் வருடக் கணக்கீடுகள்... இப்படியிருக்கும்போது, பிறந்த தேதி எண், விதி எண்ணைத் தீர்மானிப்பதில் எவ்வகையிலான வருடக் கணக்கீடுகளைக் கையாள்வது என்று சிலருக்குக் குழப்பம் ஏற்படலாம். ஏன், பிறந்த தேதியையே அறிந்திராத அன்பர்களும் இவ்வையகத்தில் உண்டு.

    இப்படியானவர்களுக்கு, ராசி மற்றும் நட்சத்திர அடிப்படையில் விதிக்கப்பட்ட விசேஷ எண்களான ஆதார எண்கள் உதவும்.

    ‘0’ முதல் ‘9’ வரை உள்ள ஆதார எண்கள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் உயர்ந்தவைதான். அவ்வகையில் நமக்குரிய ஆதார எண்ணை அறிவது எப்படி, அந்த எண்ணின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோமா?

    ஆதார எண்ணை அறிவது எப்படி?

    உங்கள் ராசியையும் பிறந்த நட்சத்திரத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, ஒருவருக்கு மகர ராசி, திருவோண நட்சத்திரம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

    மேஷத்திலிருந்து எண்ணினால், மகரம் 10-வது ராசி. அசுவினி முதல் எண்ணி வர திருவோணம் 22-வது நட்சத்திரம். ராசி எண்ணையும் நட்சத்திர எண்ணையும் பெருக்கினால் வருவது 22 x 10 = 220. இதை 2+2+0 என்று கூட்டினால் வருவது 4. இதுவே இந்த அன்பருக்கான எண். இப்படி ராசி மற்றும் நட்சத்திரத்தைக் கணக்கிட்டு, ஒவ்வொருவரும் தங்களுக்குரிய ஆதார எண்ணைத் தெரிந்துகொள்ளலாம். இனி அந்த எண்களுக்கான பலனை அறிவோம்.

    0 பூஜியத்துக்கு சைபர், ஜீரோ, சூன்யம் என்ற பெயர்களும் உண்டு. சகலத்துக்கும் பொதுவானது - அடிப்படையானது பூஜியம். இதை ஆளும் கிரகம் சந்திரன். எனவே, பூஜ்ஜியம் ஒருவரின் சிரத்தை, பக்தி போன்றவற்றைக் குறிக்கும். திருப்தி, அமைதி ஆகியவற்றைப் பிரதிபலிப்பது பூஜியம்.

    1 இந்த எண், ஒருவரின் ஆதார எண்ணாக இருந்தால், அவர் தன்னம்பிக்கை, தைரியம், நியாய உணர்வு கொண்டவராக இருப்பார். சுதந்திர உணர்வு உடையவர்கள். இவர்களை ஆள்பவர் சூரியன். ஆளுமைத் திறனும் தலைமை தாங்கும் சக்தியும் உண்டு. கோபமும், அதே நேரம் நல்ல குணங்களும் இருக்கும். தீவிர தெய்வபக்தியால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.

    2 இவர்களின் அதிதேவதை அம்பாள். இவர்கள் இனிமையானவர்கள். நட்பு, பாசம் மிகுந்தவர்கள். மென்மையானவர்கள்; சட்டென உணர்ச்சி வசப்படுவார்கள். துன்பம் வந்தால் எளிதில் துவண்டுவிடுவார்கள். இவர்கள் மனிதநேயம் மிக்கவர்கள். வேகமாகச் செயலாற்றும் தன்மை இவர்களிடம் உண்டு. இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

    3 இவர்கள் சுகத்தை விரும்புகிறவர்கள். கவர்ச்சியான தோற்றத்தோடு இருக்க விரும்புவார்கள். ஆடை அணிகலன்களைப் பெரிதும் விரும்புபவர்கள். நவகிரகங்களில் புதன் இந்த எண்ணுக்கு அதிபதி. தேவையற்ற பொருள்களிலும் ஆடம்பரத்திலும் இருக்கும் நாட்டத்தைத் தவிர்த்தால், வாழ்வு குதூகலமாக இருக்கும்.

    4 நல்லிணக்கம், உண்மை பேசுதல், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு வாழ்வது இவர்களின் லட்சியமாக இருக்கும். நம்பகமானவர்கள், உழைப்பாளிகள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். ஒழுக்கம் தவறாமல் உழைத்து, உயர்பவர்கள் இவர்கள்.

    5 பஞ்ச பரமேஸ்வரர், பஞ்ச பூதங்கள், பஞ்சேந்திரியங்கள், பஞ்சலோகம் என 5-ம் எண்ணின் மகத்துவம் அமைகிறது. இதனை ஆளும் கிரகம் செவ்வாய். சமயோசித புத்தி, பல்துறைத் திறமை, சொல்வன்மை ஆகியவை இவர்களின் குணாதிசயங்கள். கோபதாபம், பிடிவாதம் ஆகியவை மிகுதியாக இருக்கும். சொந்த உழைப்பால் பொருளீட்டி உயர்நிலை அடைவார்கள். மகா கணபதியும், முருகப்பெருமானும் இவர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் தேவர்கள். செவ்வாய்க் கிழமைகளில் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நலம்.

    6 இதனை ஆளும் தெய்வம் முருகன். ஒருவரின் எண்  6-ஆக இருந்தால், அவர் நல்லவர்; பொறுமைசாலி; தர்ம சிந்தனை உள்ளவர்; உழைப்பில் நம்பிக்கை மிகுந்தவர். கோபப்படும் இயல்பு கொண்டவராக இருந்தாலும், ‘ஆறுவது சினம்’ என்ற தத்துவத்திலும் நம்பிக்கை உள்ளவராகத் திகழ்வார். நடுத்தர வயதில் நிறையச் சம்பாதித்து, சௌபாக்கியமாக வாழ்வார்.

    7 அபார தன்னம்பிக்கை உள்ளவர்கள். நிதானத்துடன், சிந்தித்து முடிவெடுத்துச் செயல்பட்டால், வாழ்க்கையில் உயரலாம். ஏழு என்பதும் சிறப்பான எண். ஏழு கடல்கள், ஏழு மலைகள், சப்த ரிஷிகள், சப்த மாதர்கள் என்று 7-ம் எண் இயற்கையோடு ஒன்றிவிடுகிறது. சந்திரனும் சூரியனும் இந்த எண்ணை ஆள்பவர்கள். ஜோதிட சாஸ்திரப்படி சந்திரன் நம் மனத்தையும், சூரியன் நம் ஆன்மாவையும் ஆள்பவர்கள். எனவே, 7-ம் எண் உடையவர்கள், தங்கள் மனதால் விரும்பியதை ஆன்ம பலத்தால் அடையும் ஆற்றல் உள்ளவர்களாகத் திகழ்வார்கள்.

    8  எண்களில் தனித்துவம் பெற்றது, 8ம் எண். அஷ்டமி திதியைக் குறிக்கும். ‘ஜன்மாஷ்டமி’ என்று கிருஷ்ணன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். ‘துர்காஷ்டமி’ என்று அம்பாளை பூஜிக்கிறோம். எட்டு திசைகள், எண்திசைக் காவலர்கள் என்று எட்டின் சிறப்பு நீள்கிறது. 8- ம் எண் பெற்றவர்கள் சுயதொழில், வாணிகம், அரசியல் போன்ற துறைகளில் வெற்றி பெறுவார்கள்.

    9 எண்களில் விசித்திரமானது 9. இந்த எண்ணை மற்ற எந்த எண்ணால் பெருக்கினாலும், கிடைக்கும் விடையில் உள்ள இலக்கங்களைக் கூட்டினால் 9-தான் வரும். இது ஒரு ஸ்திர எண் (Stable Number). இந்த எண்ணைக் கொண்டவர்கள், ஆழ்ந்த அறிவும் உயர்ந்த சிந்தனைகளும் மிக்கவராகத் திகழ்வர். சிந்தித்துச் செயலாற்றி சாதிப்பார்கள். மனித நேயமும், தர்ம சிந்தனையும் உடையவர்கள்.

    நிம்மதியான உறக்கம் வேண்டுமா..?

    உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நிம்மதியான உறக்கம் வேண்டும். கனவுகள் இல்லாத ஆழ்ந்த உறக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். ஆனால் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சிக்கித் தவிக்கும் நமக்குத்தான் உறக்கத்தில் எத்தனை எத்தனை தீய கனவுகள் தோன்றி உறக்கத்தைக் கெடுக்கின்றன. இத்தகைய அச்சம் தரக்கூடிய தீய கனவுகள் இல்லாமல், நிம்மதியாக உறங்கவேண்டும் என்றால், தினமும் படுக்கச் செல்லும்போது, இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் ஸ்லோகத்தை 3 முறை சொல்லி சிவபெருமானை தியானித்துவிட்டு உறங்கினால், எந்த கெட்ட கனவுகளும் இல்லாமல் நிம்மதியாக உறங்கலாம்.

    அந்த ஸ்லோகம் இதுதான்:

    துஸ்ஸ்வப்ன துஸ்ஸகுன துர்கதிதெளர்மனஸ்ய

    துர்பிக்ஷதுர்வ்யஸன துஸ்ஸஹதுர்யஸாம்ஸி:

    உத்பாததா பவிஷபீதிமஸத் க்ரஹார்த்திம்

    வ்யாதீம்ஸ்ச நாஸயது மே ஜகதாமதீஸ:

    கருத்து: கெட்ட கனவுகள், கெட்ட சகுனங்கள், வறுமை மனக்கவலை, துக்கம், சகித்துக் கொள்ள முடியாத அவமானம், பூகம்பம் முதலான இயற்கை உற்பாதங்கள், வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பல வகையான கஷ்டங்கள், விஷ ஜந்துக்களால் உண்டாகக் கூடிய ஆபத்துக்கள், ஜாதகரீதியாக கிரகங்களால் ஏற்படக் கூடிய பாதிப்புகள், தீராத வியாதிகள் போன்றவைகள் என்னை வருத்தாமல், உலக நாயகனான பரமேஸ்வரன் என்னைக் காப்பாற்றட்டும்.

    Previous Next

    نموذج الاتصال