No results found

    கந்தர் சஷ்டி கவசம் ஸ்ரீ கந்தர் கவசங்கள் 2 திருச்செந்தூர்


    திருச்செந்தூர்த் தேவசேனாபதி 


    நேரிசை வெண்பா


    துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,

    நெஞ்சில் பதிப்போர்க்குக் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,

    நிஷ்டையுங் கைகூடும்,

    நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.


    குறள் வெண்பா


    அமரர் இடர் தீர அமரம் புரிந்த

    குமரனடி நெஞ்சே குறி.


    நூல்


    சஷ்டியை நோக்கச் சரஹணபவனார்

    சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்

    பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

    கீதம் பாட கிண்கிணி யாட        ... ... 4


    மைய நடஞ்செயும் மயில்வாகனனார்

    கையில் வேலால் எனைக்காக்கவென்று வந்து

    வரவர வேலாயுதனார் வருக

    வருக வருக மயிலோன் வருக        ... ... 8


    இந்திரன் முதலா எண்டிசை போற்ற

    மந்திரவடிவேல் வருக வருக

    வாசவன் மருகா வருக வருக

    நேசக் குறமகள் நினைவோன் வருக ...        ... ... 12


    ஆறுமுகம் படைத்த ஐயா வருக

    நீறிடும் வேலவன் நித்தம் வருக

    சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

    சரஹணபவனார் சடுதியில் வருக ...        ... ... 16


    ரஹண பவச ரரரர ரரர

    ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி

    விணபவ சரஹ வீரா நமோநம

    நிபவ சரஹண நிறநிற நிறென        ... ... 20


    வசர ஹணப வருக வருக

    அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

    என்னை ஆளும் இளையோன் கையில்

    பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும் ...        ... ... 24


    பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க

    விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

    ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்

    உய்யொளி செளவும், உயிரையுங் கிலியும்        ... ... 28


    கிலியுங் செளவும் கிளரொளியையும்

    நிலை பெற்றென்முன் நித்தமும் ஒளிரும்

    சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும்

    குண்டலியாம் சிவகுகன் தினம் வருக        ... ... 32


    ஆறு முகமும் அணிமுடி ஆறும்

    நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

    பண்ணிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

    நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்        ... ... 36


    ஈராறு செவியில் இலகுகுண் டலமும்

    ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

    பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து

    நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்        ... ... 40


    முப்புரி நூலும் முத்தணி மார்பும்

    செப்ப ழகுடைய திருவயி றுந்தியும்

    துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்

    நவரத்னம் பதித்த நல் சீராவும்        ... ... 44


    இருதொடை அழகும் இணைமுழந் தாளும்

    திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

    செககண செககண செககண செகண

    மொகமொக மொகமொக மொகமொக மொகென        ... ... 48


    நகநக நகநக நகநக நகென

    டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண

    ரரரர ரரரர ரரரர ரரர

    ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி        ... ... 52


    டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

    டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

    விந்து விந்து மயிலோன் விந்து

    முந்து முந்து முருகவேள் முந்து        ... ... 56


    என்றனை யாளும் ஏரகச் செல்வ ...

    மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்

    லாலா லாலா லாலா வேசமும்

    லீலா லீலா லீலாவிநோத னென்று        ... ... 60


    உன்றிருவடியை உறுதியென் றெண்ணும்

    என்றலை வைத்துன் இணையடி காக்க

    என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

    பன்னிரு விழியால் பாலனைக் காக்க        ... ... 64


    அடியேன் வதனம் அழகுவேல் காக்க

    பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

    கதிர்வேல் இரண்டு கண்ணினைக்காக்க

    விதிசெவி இரண்டும் வேலவர் காக்க        ... ... 68


    நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க

    பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

    முப்பத் திருபல் முனைவேல் காக்க

    செப்பிய நாவை செவ்வேல் காக்க        ... ... 72


    கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க

    என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

    மார்பை இரத்தின வடிவேல் காக்க

    சேரிள முலைமார் திருவேல் காக்க        ... ... 76


    வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க

    பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க

    அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

    பழுபதி னாறும் பருவேல் காக்க        ... ... 80


    வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

    சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க

    நாணாங்கயிற்றை நல்வேல் காக்க

    ஆண்குறியிரண்டும் அயில்வேல் காக்க        ... ... 84


    பிட்டமிரண்டும் பெருவேல் காக்க

    வட்டக் குதத்தை வல்வேல் காக்க

    பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க

    கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க        ... ... 88


    ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க

    கைக ளிரண்டும் கருணைவேல் காக்க

    முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க

    பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க        ... ... 92


    நாவில் சரஸ்வதி நற்றுணை யாக

    நாபிக் கமலம் நல்வேல் காக்க

    முப்பால் நாடியை முனைவேல் காக்க

    எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க        ... ... 96


    அடியேன் வசனம் அசைவுள நேரம்

    கடுகவே வந்து கனகவேல் காக்க

    வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

    அரையிருள் தன்னில் அனையவேல் காக்க        ... ... 100


    ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

    தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க

    காக்க காக்க கனகவேல் காக்க

    நோக்க நோக்க நொடியில் நோக்க        ... ... 104


    தாக்க தாக்க தடையறத் தாக்க

    பார்க்க பார்க்க பாவம் பொடிபட

    பில்லி சூனியம் பெரும்பகை அகல

    வல்ல பூதம் வலாட்டிகப்பேய்கள்        ... ... 108


    அல்லல்படுத்தும் அடங்காமுனியும்

    பிள்ளைகள் தின்னும் புழக்கடைமுனியும்

    கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்

    பெண்களைத் தொடரும் பிரமராக் கருதரும்        ... ... 112


    அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

    இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்

    எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

    கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்        ... ... 116


    விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

    தண்டியக்காரரும் சண்டா ளர்களும்

    என் பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

    ஆனை அடியினில் அரும்பா வைகளும்        ... ... 120


    பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

    நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

    பாவைக ளுடனே பலகலசத்துடன்

    மனையில் புதைத்த வஞ்சனை தனையும்        ... ... 124


    ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும்

    காசும் பணமும் காவுடன் சோறும்

    ஓதும்அஞ் சனமும் ஒருவழிப் போக்கும்

    அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட        ... ... 128


    மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

    காலதூ தாளெனைக் கண்டால் கலங்கிட

    அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

    வாய்விட் டலறி மதிகெட் டோட        ... ... 132


    படியினில் முட்டப் பாசக் கயிற்றால்

    கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

    கட்டி உருட்டு கால்கை முறியக்

    கட்டு கட்டு கதறிடக் கட்டு        ... ... 136


    முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட

    செக்குசெக்கு செதில் செதிலாக

    சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு

    குத்து குத்து கூர்வடி வேலால்        ... ... 140


    பற்றுபற்று பகலவன் தணலெரி

    தணலெரி தணலெரி தணலதுவாக

    விடுவிடு வேலை வெருண்டது ஓடப்

    புலியும் நரியும் புன்னரி நாயும்        ... ... 144


    எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோடத்

    தேளும் பாம்பும் செய்யான் பூரான்

    கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

    ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க        ... ... 148


    ஒளுப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

    வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்

    சூலையங் சயங்குன்மம் சொக்குச் சிறங்கு

    குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி        ... ... 152


    பக்கப் பிளவை படர்தொடை வாழை

    கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

    பல்குத்து அரணை பருஅரை ஆப்பும்

    எல்லாப்பிணியும் என்றனைக் கண்டால்        ... ... 156


    நில்லாதோட நீயெனக் கருள்வாய்

    ஈரேழ் உலகமும் எனக்குற வாக

    ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

    மண்ணாளரசரும் மகிழ்ந்துற வாகவும்        ... ... 160


    உன்னைத் துதிக்க உன்திரு நாமம்

    சரஹணபவனே சைலொளி பவனே

    திரிபுர பவனே திகழொளி பவனே

    பரிபுர பவனே பவமொளி பவனே        ... ... 164


    அரிதிரு மருகா அமாராபதியைக்

    காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்

    கந்தா குகனே கதிர் வேலவனே

    கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை        ... ... 168


    இடும்பனை அழித்த இனியவேல் முருகா

    தணிகா சலனே சங்கரன் புதல்வா

    கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா

    பழநிப் பதிவாழ் பால குமாரா        ... ... 172


    ஆவினன்குடிவாழ் அழகிய வேலா

    செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா

    சமராபுரிவாழ் சண்முகத் தரசே

    காரார் குழலாள் கலைமகள் நன்றாய்        ... ... 176


    என் நாஇருக்க யானுனைப் பாட

    எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

    பாடினேன் ஆடினேன் பரவசமாக

    ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை        ... ... 180


    நேசமுடன் யான் நெற்றியில் அணியப்

    பாசவினைகள் பற்றது நீங்கி

    உன்பதம் பெறவே உன்னருளாக

    அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்        ... ... 184


    மெத்தமெத்தாக வேலா யுதனார்

    சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க

    வாழ்கவாழ்க மயிலோன் வாழ்க

    வாழ்கவாழ்க வடிவேல் வாழ்க        ... ... 188


    வாழ்கவாழ்க மலைக்குரு வாழ்க

    வாழ்கவாழ்க மலைக்குற மகளுடன்

    வாழ்கவாழ்க வாரணத் துவஜம்

    வாழ்கவாழ்க என் வறுமைகள் நீங்க        ... ... 192


    எத்தனைகுறைகள் எத்தனை பிழைகள்

    எத்தனை யடியேன் எத்தனை செயினும்

    பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்

    பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே        ... ... 196


    பிள்ளையென்றன்பாய்ப் பிரிய மளித்து

    மைந்தனென்மீதுன் மனமகிழ்ந் தருளி

    தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய்

    கந்தர் சஷ்டிகவசம் விரும்பிய        ... ... 200


    பாலன் தேவராயன் பகர்ந்ததை

    காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

    ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

    நேசமுடனொரு நினைவதுமாகிக்        ... ... 204


    கந்தர் சஷ்டிக்கவசமிதனைச்

    சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

    ஒருநாள் முப்பத்தாறுருக்கொண்டு

    ஓதியே செபித்து உகந்துநீ றணிய        ... ... 208


    அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்

    திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர்

    மாற்றலரெல்லாம் வந்து வணங்குவர்

    நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்        ... ... 212


    நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்

    எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்

    கந்தர் கைவேலாம் கவசத் தடியை

    வழியாய்க்காண மெய்யாய் விளங்கும்        ... ... 216


    விழியால்காண வெருண்டிடும் பேய்கள்

    பொல்லா தவரைப் பொடிபொடியாக்கும்

    நல்லோர் நினைவில் நடனம் புரியும்

    சர்வ சத்துரு சங்கா ரத்தடி        ... ... 220


    அறிந்தெனதுள்ளம் அட்டலட்சு மிகளில்

    வீரலட்சுமிக்கு விருந்துணவாகச்

    சூரபத்மாவைத் துணித்தகை அதனால்

    இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த        ... ... 224


    குருபரன் பழநிக் குன்றிலி ருக்கும்

    சின்னக் குழந்தை சேவடி போற்றி

    எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்

    மேவிய வடிவுறும் வேலவா போற்றி        ... ... 228


    தேவர்கள் சேனா பதியே போற்றி

    குறமகள் மனமகிழ்கோவே போற்றி

    திறமிகு திவ்விய தேகா போற்றி

    இடும்பா யுதனே இடும்பா போற்றி        ... ... 232


    கடம்பா போற்றி கந்தா போற்றி

    வெட்சி புனையும் வேளே போற்றி

    உயர்கிரி கனகசபைக்கோ ரரசே

    மயில் நடமிடுவோய் மலரடி சரணம்        ... ... 236


    சரணம் சரணம் சரஹண பவஓம்

    சரணம் சரணம் சண்முகா சரணம் ...        ... ... 238

    Previous Next

    نموذج الاتصال