No results found

    திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி

    திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி

    1. ஆடும் பரிவேல் ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனி யானைச் சகோதரனே. 2. உல்லாச நிராகுலம் உல்லாச, நிராகுல, யோக இதச் சல்லாப, விநோதனும் நீ அலையோ? எல்லாம் அற, என்னை இழந்த நலம் சொல்லாய், முருகா சுரபூ பதியே. 3. வானோ புனல் (ஆறுமுகமான பொருள் எது?) வானோ? புனல் பார் கனல் மாருதமோ? ஞானோ தயமோ? நவில் நான் மறையோ? யானோ? மனமோ? எனை ஆண்ட இடம் தானோ? பொருளாவது சண்முகனே. 4. வளைபட்ட (மனை மக்கள் எனும் மாயை அகல அருள்வாய்) வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும் தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ? கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும், தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. 5*. மகமாயை (மாயை அற) மக மாயை களைந்திட வல்ல பிரான் முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே. 6. திணியான மநோ (ஆறுமுகன் அடியாரை ஆட்கொள்வான்) திணியான மனோ சிலை மீது, உனதாள் அணியார், அரவிந்தம் அரும்பு மதோ? .. பணியா? .. என, வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயா பரனே. 7. கெடுவாய் மனனே (ஈகையும் தியானமும் நம்மைக் காக்கும்) கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடு வேதனை தூள்படவே விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. 8. அமரும் பதி (மயக்கம் தீர்ப்பான் முருகன்) அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப் பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பெரு தானவ நாசகனே. 9*. மட்டு ஊர் (மங்கையர் மையல் தூரத்தேக) மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப் பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்? தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல, நிர்பயனே. 10. கார் மா மிசை (காலன் அணுகாமல் காத்திடுவான் கந்தன்) கார் மா மிசை காலன் வரில், கலபத் தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய் தார் மார்ப, வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடுவே லவனே. 11. கூகா என (உறவினர் அழப் போகா வகை உபதேசம் பெற்றது) கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே. 12. செம்மான் மகளை (சும்மா இரு சொல் அற) செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன், பிறவான், இறவான் .. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. 13. முருகன் தனி வேல் (முருகனின் அருளைக் கொண்டு மட்டுமே அவனை அறிய முடியும்) .. முருகன், தனிவேல் முனி, நம் குரு .. என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று, இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. 14. கைவாய் கதிர் (மனதிற்கு உபதேசம்) கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய் மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே. 15. முருகன் குமரன் (நாம மகிமை) முருகன், குமரன், குகன், என்று மொழிந்து உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய் பொரு புங்கவரும், புவியும் பரவும் குருபுங்கவ, எண் குண பஞ்சரனே. 16. பேராசை எனும் (பேராசையில் கலங்குவது நியாயமா முருகா?) பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ? வீரா, முது சூர் பட வேல் எறியும் சூரா, சுர லோக துரந்தரனே. 17. யாம் ஓதிய (கற்றதன் பலன் கந்தன் கழலடிக்கு தன்னை அர்ப்பணம் செய்வதே) யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும் தாமே பெற, வேலவர் தந்ததனால் பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர், நடவீர் இனியே. 18. உதியா மரியா (துதி மயமான அநுபூதி) உதியா, மரியா, உணரா, மறவா, விதி மால் அறியா விமலன் புதல்வா, அதிகா, அநகா, அபயா, அமரா பதி காவல, சூர பயங் கரனே. 19. வடிவும் (வறுமையை நீக்கி அருள்வாய்) வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோ கியவா அடி அந்தம் இலா அயில் வேல் அரசே மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே. 20. அரிதாகிய (உபதேசம் பெற்றதை வியத்தல்) அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா விரிதாரண, விக்ரம வேள், இமையோர் புரிதாரக, நாக புரந்தரனே. 21. கருதா மறவா (திருவடி தீட்சை அருள்வாய்) கருதா மறவா நெறிகாண, எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய் வரதா, முருகா, மயில் வாகனனே விரதா, சுர சூர விபாடணனே. 22. காளைக் குமரேசன் (தன் தவப் பேற்றை எண்ணி அதிசயித்தல்) காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா பாளைக் குழல் வள்ளி பதம் பணியும் வேளைச் சுர பூபதி, மேருவையே. 23. அடியைக் குறியாது அடியைக் குறியாது அறியா மையினால் முடியக் கெடவோ? முறையோ? முறையோ? வடி விக்ரம வேல் மகிபா, குறமின் கொடியைப் புணரும் குண பூதரனே. 24*. கூர் வேல் விழி (மங்கையர் மோகம் கெட, திருவருள் கூட) கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும் போர் வேல, புரந்தர பூபதியே. 25. மெய்யே என (வினை மிகுந்த வாழ்வை நீக்கு முருகா) மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து ஐயோ, அடியேன் அலையத் தகுமோ? கையோ, அயிலோ, கழலோ முழுதும் செய்யோய், மயில் ஏறிய சேவகனே. 26. ஆதாரம் இலேன் (திரு அருள் பெற) ஆதாரம் இலேன், அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே வேதாகம ஞான விநோத, மன அதீதா சுரலோக சிகாமணியே. 27. மின்னே நிகர் (வினையால் வருவது பிறவி) மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன் இங்கு இதுவோ? பொன்னே, மணியே, பொருளே, அருளே, மன்னே, மயில் ஏறிய வானவனே. 28. ஆனா அமுதே (நீயும் நானுமாய் இருந்த நிலை) ஆனா அமுதே, அயில் வேல் அரசே, ஞானாகரனே, நவிலத் தகுமோ? யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே. 29. இல்லே எனும் (அறியாமையை பொறுத்தருள் முருகா) இல்லே எனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன் அறியாமை பொறுத்திலையே மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே. 30. செவ்வான் (உணர்த்திய ஞானம் சொல்லொணானது) செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று ஒவ்வாதது என உணர்வித் ததுதான் அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. 31. பாழ் வாழ்வு (ஜெகமாயையில் இட்டனையே .. நீ வாழ்க) பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே வீழ்வாய் என என்னை விதித்தனையே தாழ்வானவை செய்தன தாம் உளவோ? வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. 32. கலையே பதறி (கலை ஞானம் வேண்டாம்) கலையே பதறிக், கதறித் தலையூடு அலையே படுமாறு, அதுவாய் விடவோ? கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே, மலை கூறிடு வாகையனே. 33. சிந்தா ஆகுல (பந்தத்தின்று எனைக் காவாய்) சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும் விந்தாடவி என்று விடப் பெறுவேன் மந்தாகினி தந்த வரோதயனே கந்தா, முருகா, கருணாகரனே. 34*. சிங்கார மட (தீநெறியினின்று எனைக் காவாய்) சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் எனக்கு வரம் தருவாய் சங்க்ராம சிகாவல, சண்முகனே கங்காநதி பால, க்ருபாகரனே. 35. விதி காணு (நற் கதி காண அருள்வாய்) விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்? மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின் துதியா விரதா, சுர பூபதியே. 36. நாதா குமரா (சிவபெருமானுக்கு உபதேசித்த பொருள் எது?) நாதா, குமரா நம என்று அரனார் ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்? வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பத சேகரனே. 37. கிரிவாய் விடு (உன் தொண்டனாகும்படி அருள்வாய்) கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய் மனனே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே. 38. ஆதாளியை (என்னையும் ஆண்ட கருணை) ஆதாளியை, ஒன்று அறியேனை அறத் தீது ஆளியை ஆண்டது செப்புமதோ கூதாள கிராத குலிக்கு இறைவா வேதாள கணம் புகழ் வேலவனே. 39. மாவேழ் சனனம் (பிறப்பையும் ஆசையையும் நீக்கு முருகா) மாஏழ் சனனம் கெட மாயைவிடா மூஏடணை என்று முடிந்திடுமோ கோவே, குறமின் கொடிதோள் புணரும் தேவே சிவ சங்கர தேசிகனே. 40. வினை ஓட (வேல் மறாவதிருப்பதே நமது வேலை) வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங்கிடவோ? சுனையோடு, அருவித் துறையோடு, பசுந் தினையோடு, இதணோடு திரிந்தவனே. 41. சாகாது எனையே (காலனிடத்திலிருந்து எனைக் காப்பாற்று) சாகாது, எனையே சரணங் களிலே கா கா, நமனார் கலகம் செயும் நாள் வாகா, முருகா, மயில் வாகனனே யோகா, சிவ ஞான உபதேசிகனே. 42. குறியை (எவ்வேளையும் செவ்வேளையே நினை) குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும் செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. 43. தூசா மணியும் (சொல்லற எனும் ஆனந்த மெளனம்) தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா நினது அன்பு அருளால் ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே. 44. சாடும் தனி (முருகன் திருவடி தந்தான்) சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும் படி தந்தது சொல்லு மதோ? வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம் காடும், புனமும் கமழும் கழலே. 45. கரவாகிய கல்வி (மெய் பொருளே, உன் நிலையை உணர்த்து) கரவாகிய கல்வி உளார் கடை சென்று இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ? குரவா, குமரா, குலிசாயுத, குஞ் சரவா, சிவயோக தயாபரனே. 46. எந்தாயும் (மாதா பிதாவும் இனி நீயே .. மனக் கவலை தீராய்) எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள் கந்தா, கதிர் வேலவனே, உமையாள் மைந்தா, குமரா, மறை நாயகனே. 47. ஆறாறையும் (மேலான தவ நிலை அருள்வாய், காவலனே) ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப் பேறா அடியேன், பெறுமாறு உளதோ? சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர் கூறா உலகம் குளிர்வித்தவனே. 48. அறிவு ஒன்று (மேலான தவ நிலை அருள்வாய், காவலனே) அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில் பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ? செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய வெறி வென்றவரோடு உறும் வேலவனே. 49. தன்னம் தனி (இனிமை தரும் தனிமை .. விளக்க முடியுமா?) தன்னந் தனி நின்றது, தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ? மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார் கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே. 50. மதி கெட்டு (முருகன் அருளால் முக்தி பெற்றேன்) மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக் கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்? நதி புத்திர, ஞான சுகாதிப, அத் திதி புத்திரர் வீறு அடு சேவகனே. 51. உருவாய் அருவாய் (குருவாக வந்து அருளினான் கந்தன்) உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. 52. காணா விழியும் (சலக்கரை பெற) காணா விழியுங் கருதா மனமும் வீணாய் விடமுன் விதியோ விதியோ பூணாள் குறமின் புனமும் வனமும் நாணா துநடந் திடுநா யகனே. 53. ஊணே பொருளா (இழந்ததைப் பெற) ஊணே பொருளா யுழலுற் றடியேன் வீணே கெடமுன் விதியோ விதியோ பூணே யிமையோர் புகழே மிகயான் சேணே பெறவேல் விடுதே சிகனே. 54. கழுவார் அயில்வேல் (நோய் தீர) கழுவா ரயில்வேல் கருணைக் கடலின் முழுகார் குறுகார் முளரிக் கைக்கொண் டொழுகார் வினையூ டுழல்வா ரவரோ அழுகார் தொழுநோ யதிபா தகரே. 55. விண்ணார் பதமும் (மோக்ஷ சாதனம் பெற) விண்ணார் பதமும் விரிநீர் புடைசூழ் மண்ணார் பதமும் மகழேன் மகிழேன் தண்ணா ரமுதே சயிலப் பகையே கண்ணா ரமுதே கனியைப் பெறினே. 56. உனையே யலதோர் (உச்சாடனஞ் செய்ய) உனையே யலதோர் பரமுண் டெனவே நினையே னெனையூழ் வினைநீ டுமதோ கனையேழ் கடல்போல் வருகார் சமணர் முனையே தெறுசண் முகவே லவனே. 57. இரவும் பகலும் (சத்துருவைச் சங்கரிக்க) இரவும் பகலுந் துதிசெய் திருதாள் பரவும் பரிசே பரிசின் றருள்வாய் கரவுண் டெழுசூர் களையக் கதிர்போல் விரவுஞ் சுடர்வேல் விடுசே வகனே. 58. இலகுந் துடி (புகழ் பெற) இலகுந் துடிநே ரிடையார் விழிகூ ரலகம் பெனவே யறியா தழிகோ கலகந் தருசூர் கதறப் பொருதே ழுலகம் புகழ்பெற் றிடுமோ தயனே. 59.. மாதோ மலமாயை (உலகநடை அறிய) மாதோ மலமா யைமயக் கவருஞ் சூதோ வெனமெய் துணியா வெனையின் றேதோ விருள்செய் துநிறைந் திடுவார் தீதோ டவருள் சிவதே சிகனே. 60. களவும் படிறும் (தேர்ந்து கோள்ள) களவும் படிறுங் கதமும் படுமென் னளவுங் கதிர்கொண் டருள்சேர்ந் திடுமோ இளகுங் குறமின் னிருதோள் முலையும் புளகம் பரவப் புணர்வே லவனே. 61. வாழைக் கனி (தேசம் செழிக்க) வாழைக் கனிமா மாதுரச் சுளையே ஏழைக் கரிதென் றிடுவா ருளரோ பாழைப் பயிற்செய் திடுசிற் பரையின் பேழைப் பொருளா கியவே லவனே. 62.. சதிகொண்ட (செங்கோல் செலுத்த) சதிகொண் டமடந் தையர்தம் மயலிற் குதிகொண் டமனத் தனெனக் குறியேல் மதிகொண் டநுதற் குறமங் கைகுயந் துதிகொண் டுமணந் தருள் தூயவனே. 63. தாயே எனை (செங்கோல் நடக்க) தாயே யெனையா டனிவே லரசே காயே பொருளாய் கனிகை விடுமோ பேயே னிடையென் பெறவந் தெளிதாய் நீயே மறவா நெறிதந் ததுவே. 64. சின்னஞ் சிறியேன் (நகரி சோதிக்க) சின்னஞ் சிறியேன் சிதைவே செயினும் பொன்னம் பெரியோர் பிழைசெய் குவரோ கன்னங் கரியோன் மருகா கழறத் தன்னந் தனியென் றனையாண் டவனே. 65.. துடிபட்ட மடந்தையர் (படை வெல்ல) துடிபட் டமடந் தையர்சூ றையிலே குடிபட் டிடுமென் குறைகட் டறுமோ வெடிபட் டெழுசூர் கிளைவே ரொடுசென் றடிபட் டிடவென் றமரும் பதியே. 66.. கல்லேய் மனமும் (எதிரி முறிய) கல்லேய் மனமுங் கணையேய் விழியும் வில்லேய் நுதலும் பெறுமெல் லியர்வாய்ச் சொல்லே பதமாய்த் துடிபட் டழிய வல்லே னலன்யான் மயில்வா கனனே. 67. கலை கற்கினும் (கொலை களவு வஞ்சம்தீர) கலைகற் கினுமென் கவிபா டினுமென் நிலைகற் கினுமென் னினைவந் துணராக் கொலைகற் றிடுவோர் கொடுவஞ் சகமா மலைகட் டறவென் றருள்வாய் குகனே. 68. சனகாதியர் (அபசாரம் வரமலிருக்க) சனகா தியருக் கரியாய் தமியா யெனகா ரணமா கவிரும் பினைநீ கனகா சலவில் லிகளிக் கவரு மனகா வலமா வமரர் பதியே. 69. கல்லேனயலார் (அற்பரை நீங்க) கல்லே னயலார் கவியைப் பொருளாய்ப் புல்லே னவர்வாழ் வுபுரிந் தருள்வாய் வல்லே யினிவந் தருளா யணியா நில்லே னிறைநெஞ் சொடுவே லரசே. 70. மஞ்சைப் புரையார் (மறுதெய்வந் தொழாதிருக்க) மஞ்சைப் புரையார் மதிதோன் றுதலால் பஞ்சைப் பயில்தே வரொடிம் பர்களி னெஞ்சைப் பிரியாய் நிகழ்மா மதியின் பிஞ்சைப் புனையும் பெருமான் மகனே. 71. விதிவந் தனை (விதிப்படி பணிவிடை செய்ய) விதிவந் தனைசெய் விமலன் கழலே கதியென் றடைவார் கடனா வதுவே பதிகண் பணியோ டழிநல் குரவும் மதிசஞ் சலமும் மண்ணாய் விடுமே. 72. என்னே ரமுநின் (குருவுக்குப் பணிவிடை செய்ய) என்னே ரமுநின் னருதாண் மலரைப் பொன்னே யெனயான் புனையப் பெறுமோ அன்னே யமுதே யயில்வே லரசே கொன்னே பிறவிக் குறைபெற் றிடினே. 73. அருளைத் தரு (குருவுக்கு விதிப்படி பணிவிடை செய்ய) அருளைத் தருநின் னடியிற் பணியார் மருளைச் சிதையார் மதிகெட் டவர்தாம் குருளத் தசையிற் குருவா வினவும் பொருளைத் தெளியப் புகறே சிகனே. 74. தொண்டாகிய (தொண்டராக) தொண்டா கியநந் துயர்தீ ருமருந் துண்டா கியுமென் றுலைவாய் மனனே வண்டார் குழல்வள் ளிமணந் தருளும் தண்டா யுதவேள் சரணந் துதியே. 75. அழியா நிலை (கிருபையால் பதம்பெற) அழியா நிலைதந் தருள்சே வலனே விழியா லுணர்வார் விதமே புகல்வாய் பழியார் புகழார் பழிநண் பிகழா ரொழியா ரொழியா ருலகியா வையுமே. 76. துனிநாளும் விடாது (தெய்வ நீதியாக) துனிநா ளும்விடா துதொடர்ந் தபல னினிநா னணுகா மையியம் பினனால் பனிநாண் மதிசூ டிபணிந் துதொழும் தனிநா யகனா கியசண் முகனே. 77. ஞானந் தனை (ஞானம் பெற) ஞானந் தனைநின் றுநடத் தவிடா மோனந் தனையென் றுமொழிந் திடுமோ ஆனந் தநடத் தனளித் தருளும் மானந் தனிவேல் மயில்வா கனனே. 78. மதமுஞ் சினமும் (பரமார்த்த மடைய) மதமுஞ் சினமும் வளருந் தருவே சதமென் றுணருஞ் சனனுக் கெளிதோ கதமுந் தியருள் கனிவித் திடுவேல் பதமுஞ் சுரமும் பதமே பெறலே. 79. அய்யா முடல் (பஞ்சபூதங்களை அறிய) அய்யா முடலூண் மயமா யுளதால் அய்யா றாறு மறிவித் தருள்வாய் செய்யா முருகா திகழ்வே லரசே அய்யா குமரா அருளா கரனே. 80.. நவியென் றிடு (குருவாக) நவியென் றிடுகண் மடவார் நனிகேள் செவியென் றயில்வேள் புகழ்சென் றிலதோ கவியென் றவன்வார் கழல்பெற் றிலதோ ரவியென் றவன்வாழ் புவியன் றியதே. 81. பெரியோ ரெனினும் (தானே குருவா யிருக்க) பெரியோ ரெனினும் புலையோ ரெனினுஞ் சிறியோ ரெனினுந் தெளிவோ ரவரோ குறியோ ரெனினுங் குருவா வருள்வா னெறியோ டொழுகும் நிலைபெற் றிடினே. 82. பக்திக் கயலே (பக்தி செய்ய) பக்திக் கயலே னனிநின் பதமுஞ் சித்திக் கயலே னெனறிண் ணமதே புத்திக் கடலே பொருவே லரசே முத்திக் கனியே முனிபுங் கவனே. 83. பேயா கிலு (மகா தேசிகனாக) பேயா கிலுநன் றதிலும் பிறிதென் றேயா தனைவந் தடிமைத் தொழில்கொண் டோயா தெனைநீ யொழியத் தகுமோ வாயா ரமுதே மயில்வா கனனே. 84. மிகவுங் கொடியேன் (கடவுள் துணையாயிருக்க) மிகவுங் கொடியேன் விதிகுன் றிடவந் திகமும் பரமும் பெறவென் றிசைவாய் சுகமுஞ் சுகமுந் தொடர்வேல் கொடுமுச் சகமுந் தனிகாத் தருள்சண் முகனே. 85. நசையன் பிலர் (கடவுளை ஏவல்கொள்ள) நசையன் பிலர்பா னயவா தொழியின் வசையுண் டெனுமவ் வழிநின் றருள்வாய் விசையம் பெறுசூர் வெருவப் பொருதெண் டிசையும் புகழத் திகழ்வே லவனே. 86. உருகற் பகமென் (கற்பகத்தரு பெற) உருகற் பகமென் றுனையே யடைவே னிறுகற் பகைவற் கிதமோ துவனோ தெறுகற் சிலைகொண் டெயில்செற் றிடுபூண் டறுகட் பணியன் தருபுத் திரனே. 87.. கள்ளம் படு (கவடுதீர, சுவாமி பார்யாயிருக்க) கள்ளம் படுகட் கடையார் கடைதே ருள்ளம் படலென் றகலக் களைவாய் பள்ளம் படுநீ ரெனவே பரிவின் வெள்ளம் படுநல் வழிவே லவனே. 88.. வள்ளைக் குழை (பெண்ணாசை தீர) வள்ளைக் குழைமங் கையர்சிங் கியிலே கொள்ளைப் படுமென் குறைதீ ருமதோ வெள்ளைத் தனிமால் விடையன் புகழும் பிள்ளைப் பெருமா ளெனும்பெற் றியனே. 89. வளையுஞ் சகமாயை (தன்னையடுத்தோர் மாயை யகல) வளையுஞ் சகமா யைமயக் கில்விழுந் துளையுந் துயரின் னுமுணர்ந் திலையே வளைகொண்ட பிரான் மருகா வடுசூர் களையுஞ் சினவெங் கதிர்வே லவனே. 90. பண்டே தொடர் (பழவினை நீக்க) பண்டே தொடர்பற் றொடுசுற் றமெனும் வெண்டே ரைமகிழ்ந் துவிழித் திடவோ கண்டே குறமங் கைதனைக் களவில் கொண்டே கடிதே கியகொற் றவனே. 91. பொன்னா வல் (சர்வமும் நன்றாயிருக்க) பொன்னா வல்கெடப் பொழியும் புகழோ ரின்னா ரினியா ரெனவெண் ணுவரோ துன்னார் கிளைவே ரறவே தொடுவேல் மன்னா பொதுவாய் மழையும் பெயுமே. 92. பொறியும் புலனும் (சர்வமும் மொன்றாய்க் காண) பொறியும் புலனும் புதிதும் முதிதும் குறியுங் குணமுங் குலமுங் குடியும் நெறியும் பரிசொன் றுமிலா நிலையா னறியுந் தரமோ வயில்வே லவனே. 93. என்னே ரமதோ (அடைக்கலம் பெற) என்னே ரமதோ தெரியா திறனாம் அன்னே ரமதொன் றாகா தெனமுன் சொன்னேன் மனனே துவலோ துவலோ தன்னேர் குகனற் சலசச் சரணே. 94. தெரியத் தெரிய (பெரியோராக) தெரியத் தெரியச் செயலுற் றிடுமுன் துரியப் பொருளைச் சொலுநா ளுளதோ கரிபெற் றிடுமின் கணவா குறமின் பரியப் பெரிதும் பணியுத் தமனே. 95. மடிமைப் படினும் (தடுத்தாட்கொள்ள) மடிமைப் படினும் மயலுற் றிடினும் அடிமைக் குரியா ரருள்சே ருவரே குடிமைக் கிலதோர் கொடிவெற் பிணையிற் படிமைப் புயலே பரிவா யினியே. 96.. வரிவேல் விழி (பாசம் அண்டாமல் வேடங்கொள்ள) வரிவேல் விழியாம் வலுவீ சுமினார் புரிவே ளையிலே பொருதிக் களைவாய் பரிவே டஞ்சூழ்ந் ததுபோ லவுணர்த் தெரிவேன் முனைமே லெறிசே வகனே. 97. நனவிற் படு (விதியை வெல்ல) நனவிற் படுநல் லுலகத் தனையும் கனவிற் பொருளாய்க் கருதா வெனைநீ வினவிச் சொலுநா ளுளதோ விதியைச் சினவிச் சிறையிட் டருதே சிகனே. 98. காடும் மலையும் (சகல பாசமுமற) காடும் மலையுங் கடலும் முருளச் சாடுந் தனிவே லுடையாய் சரணம் ஆடும் மயில்வே லரசே சரணம் பாடும் வரதற் பரனே சரணம். 99.. அனியா யமிதென் (இருவரும் ஒன்றாயிருக்க) அனியா யமிதென் றவரே மடவார் துனியார் பவமுந் துயருங் களைவார் கனியார் முருகன் கழல்பெற் றிடுவா ரினியா ரினியா ரிவருக் கிணையே. 100. ஆளா யயில்வே (சிவசாயுச்சியம் பெற) ஆளா யயில்வே ளடியிற் பணிவார் கோளாற் பிறரைக் குறிசெய் தழியார் மாளார் சமனால் மறுகார் பகையால் மீளார் வினையால் வெருவா ரவமே. 101. வாழ்வா ருறவாய் (வாழ்த்து) வாழ்வா ருறவாய் மகிழ்வார் பலருந் தாழ்வார்க் கருளுத் தமனீ யலையோ பேழ்வா யரவும் பிறைவெள் ளிறகுஞ் சூழ்வார் சடையார் தொழுதே சிகனே. * * * கந்தர் அநுபூதி முற்றிற்று * * *


    Previous Next

    نموذج الاتصال