கர்ப்ப காலத்தில் ஒரு தாய் 10 கிலோவுக்கு மேல் எடை அதிகரிப்பதால் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை. மேலும், கர்ப்ப காலம் என்பது குழந்தையின் முழு ஆயுளுக்குமான அஸ்திவாரமான காலகட்டம். பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்றால் அன்னை அனைத்துவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டியது அவசியம். ஓர் ஆரோக்கியமான உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள் என அனைத்தும் இருக்க வேண்டியது அவசியம். அதுதான் சமவிகித உணவு. சமவிகித உணவைச் சாப்பிடும்போதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் வளர்சிதை மாற்றங்கள் இயல்பான கதியில் நிகழும். கார்போஹைட்ரேட் என்பது மாவுச்சத்து. நம் உடலுக்கு அவசியமான ஆற்றலை உடனடியாகத் தருவதில் பெரும்பங்கு வகிப்பவை கார்போஹைட்ரேட்கள்தான். கர்ப்பிணிகள் இதைத் தவிர்க்கும்போது தாய் சேய் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கார்போஹைட்ரேட் மிகவும் அவசியம். உடலின் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி, மூளை செல்களின் துரிதமான செயல்பாடு ஆகியவற்றுக்கு காரணமானதும் அதுதான்.
மாவுச்சத்தற்ற ஒரு டயட் மலச்சிக்கல், மார்னிங் சிக்னெஸ் பிரச்சனைகள், அஜீரணம் போன்ற பல்வேறு உடல் கோளாறுகளை உருவாக்கக்கூடும். உடல் எடையைக் குறைப்பது என்பதை குழந்தைப் பேற்றுக்குப் பிறகு யோசியுங்கள். டயட் முதல் உடற்பயிற்சி வரை அதற்கு பல வழிகள் உள்ளன. அதை எல்லாம் இப்போது யோசிக்க வேண்டாம். தினசரி காலை நேரத்திலோ மாலை நேரத்திலோ காலார நடப்பது, சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைப்படி மேற்கொள்வது போன்றவற்றால் உடல் எடையை ஓரளவுக் கட்டுப்படுத்தலாம். அதுவே, சிறந்த வழி. தேவையற்ற டயட்களை மேற்கொண்டு சிரமப்படாதீர்கள்.